Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
பேஸ்புக்கால் இணைந்த குடும்பம்
 
.
Thursday, 13 May, 2010 11:27 AM
.
37 ஆண்டுகளுக்கு பின் தந்தை மகனும் ஒன்றிணைந்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம்தானே. அதைவிட ஆச்சரியம் கடந்த 37 ஆண்டுகளாக பரஸ்பரம் தேடிக்கொண்டிருந்த இந்த இருவரும் வலை பின்னல் தளமான பேஸ்புக் மூலம் இணைந்திருப்பதுதான். 
.
கிரஹாம் கார்பட் மற்றும் அவரது மகனான ஸ்பியர்ஸ் கார்பட் ஒன்றிணைந்த விதம் தமிழ் சினிமாவில் அவ்வப்போது பார்க்கக்கூடிய தந்தை  மகன் தேடல் கதையை விட மிகவும் சுவாரஸ்யமானது, நெகிழ்ச்சியானது.  ஸ்பியர்ஸ் கார்பட்டுக்கு தற்போது 39 வயதாகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது ஒரே லட்சியம் தன்னுடைய தந்தையை தேடி கண்டுபிடிப்பதுதான். 37 ஆண்டுகளுக்கு முன் அதாவது ஸ்பியர்ஸ் 2 வயது குழந்தையாக இருந்தபோது அவரது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு நினைவு தெரிந்த நாள் முதலாக ஸ்பியர்ஸ் தன்னுடைய தந்தையை சந்திக்க விரும்பியிருக்கிறார். என்றாவது ஒருநாள் அப்பாவை பார்த்துவிட முடியும் என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்போடு தேடல் முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார். சமீப காலமாக இன்டர்நெட் மூலமும் அவர் தந்தையை தேடியிருக்கிறார். இந்த முயற்சியில் எந்தவிதமான பயனும் கிடைக்காத நிலையிலும் அவர் மனந்தளராமல் தனது தேடலை தொடர்ந்திருக்கிறார்.

தற்போது இன்டர்நெட்டில் பிரபலமான விலாசமாக இருக்கும் பேஸ் புக் வலைப்பின்னல் தளத்தில் பெரும்பாலானோருக்கு சொந்த பக்கம் இருப்பதை உணர்ந்திருந்த ஸ்பியர்ஸ் பேஸ்புக் தளத்திலும் தன்னுடைய தந்தை பற்றிய தகவல்களை தேடியிருக்கிறார்.

தந்தையின் பெயரை டைப் செய்து விட்டு படபடக்கும் இதயத்தோடு தேடல் முடிவுகளை ஆராய்ந்த அவருக்கு இதுவரை ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. ஆனால் சமீபத்தில் ஒருநாள் பொறி தட்டி தந்தையின் பெயரில் ஒரு மாற்றத்தை செய்து தேடியிருக்கிறார். இது வரை ஸ்பியர்ஸ் எனும் பெயரை தந்தையுடன் சேர்த்து தேடிய அவர் இப்போது கிரஹாம் கார்பட் என தேடி பார்த்திருக்கிறார்.

இந்த தேடலின் பயனாக 15 கிரஹாம் கார்பட்டுகளின் பேஸ்புக் பக்கங்கள் வந்து நின்றிருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தபோது குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் இருந்த புகைப்படத்தை கண்டதுமே அவரது இதயம் உற்சாகத்தில் கூடுதலாக அடித்துக்கொண்டது.

அந்த புகைப்படத்தில் இருந்தவர் 30 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் எப்படி இருப்பாரோ அதே தோற்றத்தில் இருந்த அந்த மனிதரை பார்த்ததுமே அவர்தான் தனது தந்தையாக இருக்கவேண்டும் என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. கண்ணில் நீர்மல்க படபடக்கும் கைகளில் அவருக்கு இமெயில் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்.

அந்த இமெயிலை பெற்ற கிரஹாம் கார்பட்டும் உண்மையில் நெகிழ்ந்துதான் போனார். அவரும் கடந்த பல ஆண்டுகளாக தனது மகனை பலவிதமாக தேடிக்கொண்டுதான் இருந்தார். இப்போது வந்த பேஸ்புக் செய்தி மகன் தனக்கு கிடைத்துவிட்டதை அவருக்கு உணர்த்தியது.  

இமெயில் பரிமாற்றத்திற்கு பிறகு தந்தையும் மகனும் நேரில் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது நெகிழ்ச்சியாக 3 மணி நேரத்திற்கும் மேல் அவர்கள் விளையாடி இருக்கின்றனர். ஸ்பியர்ஸ் தன்னுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளையும் கண்டு மகிழ்ந்திருக்கிறார்.  

தந்தையான கிரஹாமும் தனது பேரனை கண்டு மகிழ்ந்திருக்கிறார். இந்த சந்திப்பை ஒரு இண்டர்நெட் கால அதிசயம் என்று சொல்ல வேண்டும். பேஸ்புக் சாத்தியமாக்கிய அதிசயம்.இந்த தேடலில் பேஸ்புக் கைகொடுத்தது தற்செயலான ஒன்றா அல்லது உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் இந்த வலைப்பின்னல் சேவையின் ஆதார குணத்தினால் நிகழ்ந்ததா என்பது சிந்தனைக்குரிய கேள்வி.
| |

மற்றவை :