பத்திரிகையாளராக இருந்து பல்வேறு துறைகளில் பணியாற்றிய பிறகு திரைப்படத் துறைக்கு வந்த சின்னப்பா கணேசன், தனக்கென சில லட்சியங்களை வகுத்து கொண்டார். அவற்றில் ஒன்று தனது முதல் படம் தொடங்கும் நாளிலேயே தனது திருமணமும் நடக்க வேண்டும் என்பது.
நாளை இந்த எண்ணம் ஈடேறுகிறது. அவரது மற்றொரு லட்சியம் மிகவும் உயர்வானது. இலங்கை அகதி ஒருவரை கைப்பிடிக்க வேண்டும் என்பதே அந்த லட்சியம். அதன்படி மகிந்திலி என்னும் மைதிலியை நாளை அவர் திருமணம் செய்து கொள்கிறார். மனைவியை கைப்பிடித்த கையோடு "அண்மைக் காலமாய்' எனும் பெயரிடப்பட்ட தன்னுடைய படத்தை அவர் தொடங்குகிறார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பேரூர் சுந்தரதேவி விநாயகர் கோயிலில் திருமணம் நடைபெறுகிறது. "அண்மைக் காலமாய்' படம் ஒரு குடும்பபாங்கான த்ரில்லராக அமையும் என்று இயக்குனர் கூறுகிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீவைகுண்டம் பேரூர், ஊட்டி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. புதுமுக இசையமைப்பாளர் சிவரூபன் இசையமைக்கிறார். |